உன் இதய கூட்டுக்குள் ஓரிடம் வேண்டும் - அகில் வேந்தன்




என் 

தூரத்து தொடுவானமே..! 

தொடு திரையில் தோன்றிய 

டிஜிட்டல் தூரிகையே..! 


உன் எண்ணமிலா,

இந்த கற்பனை வானில் 

கொஞ்ச நேரம் அனுமதி கொடு. 


என் நினைவுகளின் நிறமிகளால் 

வண்ணம் தூவி 

வானவில்லாக்கிக்கொள்கிறேன். 


நான் சொன்ன தொடுவானம் 

எங்கும் தொட்டதில்லை, 

எழுநிறம் கொண்டாலும் 

வானவில்லின் வண்ணங்கள் 

ஒன்றுக்கொன்று குழைந்ததில்லை. 


கண்ணியமான தூரத்தில் நின்று, 

தொடர்பில்லா உன்னை, 

யாரோ ஒருவனாய்

கவித்து கொள்கிறேன். 


என்விழிகளுக்கு

புலனத்தில் புலபட்டவளே..!

பிறந்தநாள் வாழ்த்தில் 

புதிதாய் பிறந்தவளே..! 

பேரும் ஊரும் ஏதுமில்லை, 

முகமுண்டு முகவரியில்லை,

உனை பார்த்த சில நிமிட தாக்கம், 

தாயை பிரியும் சேயின் ஏக்கம், 

களவு போனது என் இரவின் தூக்கம் ,


ஒரு செயலியால் 

ஒரு நாளும்,

நான் செயலிழந்ததில்லை.


மொத்தமாக 

என்னை முடக்கி போட்ட 

இறக்கமற்றவள் நீ..! 


அகண்ட பாரதம் கேட்க்கும் நாட்டில்

குரலை கூட 

என் செவிகளுக்கு தராத,

குறுகிய இதயமற்றவள் நீ..! 


அடையாளம் ஏதும் 

தெரியாமல் போனாலும், 

எனக்கு "யாதுமாய்" நீ..!   


இறுதியாக,


உன் இதய கூட்டுக்குள் ஓரிடம் வேண்டும்...

அது தோழமை சூடும் நட்ப்பாயினும், 

தோல்வி இலா உறவாயினும்... 


என 

எல்லாவற்றையும்,

உன்னிடம் சொல்லாமல், 

என் மௌனம் கலந்த புன்னகையில் 

என் எண்ணக்கூட்டுக்குள் 

எழுதி முடிக்கிறேன்...


காரணம்  

களங்கமில்லா 

உன்  நினைவுகளுக்கு 

கம்பளி போர்த்தி கவுரவிக்க

யாரோ ஒருவனாய்... 

                                         -அகில் வேந்தன்




Comments

Post a Comment